Tuesday, February 24, 2015

வெண்முகில் நகரம்-13-இரண்டு கை


அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

காதல் என்றால் என்ன? காமம் என்றால் என்ன? எவ்வளவு சொன்னாலும் எழுதினாலும் தொடமுடியாத உயரம் அது. சுருக்கமாக இப்படி புரிந்துக்கொள்கின்றேன்.
ஒரு பெண்ணுக்கு வலிக்கும் என்று நினைத்தால் காதல். ஒரு பெண்ணை வலிக்கவைக்கவேண்டும் என்று நினைத்தால் அது காமம். வெண்முரசு அப்படித்தான் எனக்கு காட்டி உள்ளது.

வலியில் ஒரு கை தன்னை தாங்கவேண்டும் என்றும், ஒரு கை தன்னை வலிக்க வைக்கவேண்டும் என்றும் பெண் மனம் நினைக்கின்றது. அந்த இரண்டு கையும் கொண்ட மனிதன்தான் நல்ல கணவன். நல்ல கணவனுக்கு கூட அந்த இரண்டு கையும் இருக்கா என்று சொல்லமுடிவதில்லை. தாங்க பழகிய கை வலிக்க வைப்பது இல்லை. வலிக்க வைக்கும் கை தாங்குவதில்லை. பெண்மை ஒரு கையையே இரு கையாகக்கொண்டு நிறைவடைகின்றது. எங்கோ ஒரு நிறைவடையாத பெண் கீழ்மகள் ஆகின்றாள்.

காலம்காலமாக நமது மண்ணில் நடக்கும் ராமநாடகம் சொல்வது என்ன? மாற்றான் மனைவிக்கு ஆசைப்பட்டு தானும் அழிந்து, தனது குலத்தையும் அழித்தான் ராவணன் என்று சொல்கிறது. எங்கள் ஊரில் அண்ணனும் தம்பியும் சம்பூரணராமயணம் நடிப்பார்கள். தம்பி ராமன், அண்ணன் ராவணன். அண்ணன் பிள்ளைக்கு கல்யாணமாகி குழந்தைகள் இருக்கின்றது. நாடகம் நடத்தபோன இடத்தில் தனது குழந்தை, குடும்பத்தைவிட்டுவிட்டு வந்த பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்துவந்து வைத்து கட்டிய மனைவியோடு வைத்து குடும்பம் நடத்தினார். அவரைப்பார்க்கும்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன். இராவணன்  இன்னும்  உயிரோடுதான் இருக்கிறான்.  ராமநாடகம் சொல்லும் நீதி மட்டும் ஏன் செத்து செத்து விழுந்துக்கொண்டே இருக்கிறது? கீழ்மையில் உள்ள சுவையை மனிதன் சுவைப்பதுபோல் மிருகங்கள்கூட சுவைப்பது இல்லை.   கீழ்மையின் சுவைக்கு மனிதன் கொடுக்கும் விலையை கடவுளால்கூட கணக்குப் பார்க்கமுடியாது. 

கங்கையில் நீந்தும் திரௌபதியை அவள் எழும் இடங்களில் எல்லாம் தன் கைக்கொண்டு தாங்கினான் பீமன் என்ற வரிவரும்போதெல்லாம் என்ன ஒரு தாய்மை என்று மகிழ்ந்தேன். கட்டிலில் தொட்டிலில் வீட்டினில் மனைவியின் வலியறிந்து தாங்கும் பொழுதெல்லாம் தன்னை அன்னையாகநினைக்கும் கணவன் இதயத்தில் சுரக்கும் காதலுக்கு மண்ணும் விண்ணும் ஈடாகுவதில்லை. அங்கு உடல் மறந்து அகம் மலர்ந்துவிடுகின்றது. மனைவி கணவன் நெஞ்சில் உதைத்து துள்ளும்போதுகூட அவனுக்கு உடல் அங்கு இல்லை உள்ளமே இருக்கிறது. திரௌபதி பீமனிடம் காண்பது வலியறியும் கை. தாயின் கை.

திரௌபதி தருமனுடன் கூடியதில், பீமனுடன் கூடியதில் உடல் எரியும் அர்ஜுனன் இன்று மாயையுடன் கூடியதில் திரௌபதி உடல் எரிகின்றாள் என்பதை அறிந்து உடல் முழுவதும் உவகை நிறைந்திருப்பதை உணர்கின்றான். திரௌபதி அர்ஜுனனுக்கு செய்யும் கொடுமைதான்.  அர்ஜுனன் திரௌபதிக்கு செய்யும் கொடுமையும். ஒருவரை ஒருவர் உடம்பாகவே பார்க்கின்றார்கள். உடம்புக்கு மேல் அவர்களுக்குள் எதுவுமே இல்லையா? அர்ஜுனன் திரௌபதியிடம் நிறைவடையாமல்போனது இந்த உடம்போடு மட்டும் பிணைந்த காமம், காமத்தால் வரும் சினமும். திரௌபதியும் அதே நிலையையே அர்ஜுனன் இடம் அடைகிறாள். காமம், காமத்தால் எழும் சினமும். இது ஒரு நாக பிணைப்பு வாழ்க்கை. உடம் இணைந்தே இருக்கம் ஒன்றை ஒன்று நோக்கி சீறிக்கொண்டு இருக்கும்.

அர்ஜுன்ன கை வலிக்க வைக்கும் கை. வலிக்கும்போதே தனக்கு உடம்பு என்ற ஒன்று இருக்கு என்று திரௌபதியை உணரவைக்கும் கை. அந்த கையை அவள் வெறுக்கலாம் வெட்டவும் துணியலாம் ஆனால் வெட்டவும் மாட்டாள் நீங்கவும் மாட்டாள்.

மானிட அகம் உள்ளமாகவும் உடம்பாகவும் மாறும் விந்தையை காதல் என்றும் காமம் என்றும் பீமன் அர்ஜுனன் இடத்தில் திரௌபதி நடந்துக்கொள்ளும் விதத்தில் உணர்ந்தேன். நன்றி ஜெ.

பெண் எவ்வளவு அசிங்கமாக அவமானப்படுத்தி திட்டினாலும் உரைக்க மாட்டேங்கறது அர்ஜுனனாக இருக்கும்போது. எவ்வளவு அடம்பிடித்தாலும் முறைத்தாலும் முரண்டுபிடித்தாலும்  கல்லாக போனாலும்  இந்திரனை அகலிகையும் விடுவதில்லை.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்