Friday, July 24, 2015

முடியுரிமை

அன்புள்ள ஜெ.

சமீபமாக வெண் முரசு விடாது படித்து வருகிறேன்.

பாமையை யாதவப் பேரரசி எனக்கொண்டாடும் அத்தியாயங்களைப் படித்த போது, ஏன்
ருக்மணி யாதவப் பேரரசி இல்லையா எனும் கேள்வி எழுந்தது. சியமந்தக மணி
மீட்பைத் தொடர்ந்து வந்த அத்தியாயங்களில் அதற்கான விடை தெளிவுறக்
கிடைத்து விட்டது. சுவாரசியமான அந்த நாடகம் தொடர்கிறது. இருப்பினும் வேறு
ஒரு கேள்வி என் மனதில் உள்ளது.

தகுதியுள்ள மூத்தவரே பட்டத்துக்கு உரியவர் எனும் முறைமை மஹாபாரதத்தின் பல
தளங்களிலும் அழுத்தமாக முன் வைக்கப்படுகிறது. பாண்டவர்களில் அர்ஜுனன் அதி
முக்கியமானவனாகவும், பிரதான காப்பாளனாகவும் இருப்பினும், தருமரே
முறைமையின்படி அரசராக முன் நிறுத்தப்படுகிறார்.

யாதவ குலக்குடிகளுக்கு இளைய யாதவர்தான் காப்பாளரும், எல்லாமும். அதற்குக்
காரணங்கள் பல உண்டு. அவை சரிதான். சபைகளிலும் அவர் கருத்து அதி
முக்கியமானது. அதுவும் சரிதான். ராஜ்ய பரிபாலனம், மற்றும் போர்களில்
பலராமரும், இளைய யாதவரும் இணைந்து பங்காற்றுவதும் இயல்பானதே. ஆனால்
முறைமை என்று பார்த்தால், பலராமரின் மனைவி ரேவதிதானே யாதவப்பேரரசி.

இதற்கு ஏதேனும் விளக்கம் உள்ளதா.

அன்புடன்

ரமேஷ் கிருஷ்ணன்


அன்புள்ள ரமேஷ்கிருஷ்ணன்

மதுராவும் துவாரகையும் தனித்தனி நாடுகளாகவேஇருந்தன. பலராமர் மதுராவின் அரசர். கிருஷ்ணன் துவராகையை நிறுவி தனியரசு செய்தார்.

இது ஒன்றே விளக்கமெனச் சொல்லலாம். மற்றபடி பாகவதம் அப்படித்தான் சொல்கிறது

ஜெ