Thursday, August 20, 2015

இருவித ஐயங்கள்:

ஒரு மனிதன் காலை எழுந்ததிலிருந்து இரவு தூங்கும் வரை ஒரு எப்போது தொடர்ந்திருக்கும் ஒரு உணர்வு ஐய உணர்வாகும்.  நாம் எதாவது ஒரு செயலை ஐயமின்றி செய்திருக்கிறோமா. ஒவ்வொரு செயலையும் செய்யும்போது  ஐயத்தை தவிர்க்கவே முடிவதில்லை. நாம் ஏன் ஐயப்படுகிறோம்?  மனிதர்கள் நாம் நினைத்தவண்ணம்தான் நடக்கவேண்டும் என்ற அகங்காரம் காரணமா? இதுதான் பாதை என முடிவானபின் ஏன் அவர்கள் அந்தப்பாதையை மாறி சென்றுவிடுவார்கள் என கற்பனை செய்கிறோம்? நாம் அவர்களின் பாத்திரத்தை  நம்முள் நடித்துப்பார்க்கிறோம்.  நாம்  பாதை மாறி நடந்துகொள்வோம்  என நம்மை நாமே ஐயுறுகிறோம். நம்மீது நாம் கொண்ட  ஐயமே மற்றவர்கள் மேலான ஐயமாக வளர்கிறது. நாம் பிறர் மேல் நம்பிக்கையின்றி கொள்ளும் ஐயம் எல்லாம் நாம் நம்மேல் கொண்ட நம்பிக்கையின்மையின் வெளிப்பாடேயாகும். நம்முள் இருக்கும் அந்த நாகமே மற்றவரிடத்தில் அதே நாகத்தை தேடுகிறது. நாம் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருக்கும்போது. நம்மில் இருக்கும் நாகங்கள் ஒன்றையொன்று தேடுகின்றன.  நாம் ஐயப்பட்டதின்படி ஒரு நிகழ்வு நடந்தால், அது நமக்கு தீங்கானதாக இருந்தால் கூட,  ஒரு நொடி ஒரு மகிழ்வு, ஒரு விநோத மன நிறைவு மின்னல் போல் தோன்றி மறைவதை பார்க்கலாம். அது நம்முள் இருக்கும் நாகம் மற்றவரின் நாகத்தை அறிந்துகொண்டதன்  உணர்வாகும். அக்ரூரர் சாத்யகி மேல் கொண்ட ஐயம் இத்தகையது.
 
      ஆனால்  திருஷ்டத்துய்மன் கொள்ளும் ஐயம் வேறுவிதமானது. நாம்  மற்றொரு வகையிலும்  ஐயத்தை அடைகிறோம். அது நாம் நினைத்தபடிதான் ஒன்று நடைபெறுகிறதா என்பது.  உண்மையில் நம்மை காய்களாக வைத்து  காலம் சூதாடுகிறது. அடுத்து என்ன பகடையில் விழும், அடுத்து நாம் எங்கே நகர்த்தப்படுவோம் என முற்றிலும் அறியாதவராக இருக்கிறோம். அடுத்து என்ன நிகழும் என்ற இந்த அறியாமை நம்மை நடக்கப்போகும் செயல்கள் மேல் ஐயம் கொள்ள வைக்கிறது. இந்த ஐயத்தின் காரணமாக நாம் தகுந்த முன்னேற்பாடுகளை செய்துகொள்கிறோம். ஆகவே இத்ததைய ஐயங்கள்  ஒருவகையில் நமக்கு நல்லதுதான். அதே நேரத்தில் இந்த ஐயங்கள் கட்டுக்குள் இல்லாமல் பெருகி பெருகிச்செல்லும்போது நம் மனதை பாதித்து நம் செயல்களை திறம்பட செய்யவிடாமல் தடுக்கின்றன. அவ்வகை ஐயங்களை கட்டுக்குள் வைத்துக்கொள்ளவேண்டும்.

   ஐயங்களே இல்லாமல் ஒருவன் இருக்க வேண்டுமென்றால் அவன் அனைத்தையும் துறந்து ஆசைகள், எதிர்பார்ப்புகள் அற்றவனாக இருக்கவேண்டும். வாழ்க்கையில் நடப்பவை அனைத்தையும் எவ்விதக் கேள்வியும் இல்லாமல் ஏற்றுக்கொள்பவனாக இருக்க வேண்டும். ஒருவேளை ஒருவன் ஐயங்கள் அற்ற இந்த நிலையை அடைவதுதான் முக்தி என்பதோ? 

தண்டபாணி துரைவேல்