Monday, August 31, 2015

பெரியது கேட்கின்

...

ஒரு நல்லத் திருத்தொண்டரை கண்டு அடைய எத்தனை பெரிய வாழ்க்கையை வாழவேண்டி உள்ளது. எத்தனை எத்தை களங்கள், காலங்கள், கதைகள் வழியாக பயணம் செய்துபோகின்றது அந்த வாழ்க்கை.  அதனால் தான் அன்னை ஓளவையார் பெரியது எது என்று கேட்ட எரிதவழ் வேலோன் இடம் ”தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிது” என்கிறார். பெரிதினும், பெரிதாகிய, பெரியோனாகிய இறைவன் தொண்டர் உள்ளத்தில் ஒடுங்குவதால், தொண்டர் தன் உள்ளத்தில் ஒடுக்குவதால் தொண்டர் பெரியவர்.  இறைவன் தொண்டர் உள்ளத்தில் ஏன் ஒடுங்குகின்றார்?, எப்படி ஒடுங்குகின்றார்? என்பதை மேலும் பெருக்கிக்காட்டுகின்றார் சேக்கிழார் பெருமான். 

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடுஞ் செம்பொனும் ஓக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்-பெரியபுராணம்.

காளந்தி கண்ணை கும்பிடுவதற்காகவே பிறந்தவள். தன்னை பக்தை என்றோ, கண்ணனின் மனைவி என்றோ, துவாரகையின் அரசி என்றோ என்றும் எண்ணாதவள். பொன்வளையலோடு தனது குலவளையலாகிய இருப்பும் வளையலையும் சேர்ந்தே அணிந்திருக்கும் இடத்தில் அவள் நோக்கு ஒன்றென இருக்கிறாள். சத்வகுணம் நிறம்பிய ருக்மணிகூட காளந்தியை கேளிப்பேசுகின்றாள் என்றால், மற்றவர்கள் அவளைப்பற்றி பேசும் வசை, கேளி எத்தகையதாக இருக்கும்? இருக்கிறது.  இன்றைய நாள் காளந்திக்கு உரியது என்று கண்ணனே அவளைப்புகழ்கின்றான். அந்த கணத்திலும் இருந்தும் இல்லாததுபோலவே இருக்கிறாள். தனது தவத்திற்கு மகிழ்ந்து கண்ணன் வந்தபோது கும்பிட்டதுபோலவே, சியமந்தகமணியின் ஒளியறிய எழும்போதும், நான் என்று தறுக்காமல் உனது கட்டளை என்பதுபோலவே கண்ணனைப்பணிந்து எழுகின்றாள். அவளுக்கு அரசாட்சி வேண்டாம், தனது இறைவன்போல் மாயம் செய்து ஒப்பனையில் வந்த தெய்வம் வேண்டாம், யமுனையில் இருக்கும் முடிவிலி மீனில் ஒரு ஒரு மீனை மட்டுமு் கண்டது போதும். நீலன் கையால் தரும் ஒரு நீலமலருக்காக அவள் பூத்திருக்கிறாள்.
இரண்டு என்று அவள் வாழ்க்கையில் எதுவும் இல்லை. சத்துவத்தின் சத்துவம் என்ற குணத்தையும் தாண்டி நிற்கின்றாள். யோகியரில் ஒரு யோகி ஆகின்றாள்.

திருஷ்டாத்யுமனன் முதன் முதலில் காளந்தியைப்பார்க்கும்போது இல்லாதவள்போல் அங்கு இருந்தாள் என்று எண்ணுவது எத்தனை பொருத்தம். திருத்தொண்டர்கள் இல்லாததுபோலவே இருக்கிறார்கள். கடவுளில் அவர்கள் மறைந்து இருக்கிறார்கள். கடவுளை சுமந்துக்கொண்டு இருக்கிறார்கள். பிறவிப்பெருங்கடலில் இருந்து கடவுள் அவர்களை கரை சேர்க்கிறான். பிறவிப்பெருங்கடலில் அவர்கள் கடவுளை உள்ளம் என்னும் தோணியில் வைத்து தள்ளித்தள்ளி கடவுளை கரை சேர்க்கிறார்கள் அதன் மூலம் கரைசேர்கிறார்கள். அவர்கள் கடவுளால் பெருமை அடைகிறார்கள், அவர்கள் பின்பு கடவுளை பெருமை அடைய செய்துக்கொண்டே இருக்கிறார்கள். காளந்தியின் பெருமையா இங்கு வெளிப்படுகின்றது? கண்ணனின் பெருமை அல்லாவா காளந்தியால் வெளிப்படுகின்றது. ஏழு மனைவியை கண்ணன் அடைந்தது பெருமை இல்லை, எட்டாவது என்று நிற்கும் காளந்தியை அடைந்ததன் மூலம் அவன் பெருமை அடைகிறான். இறைவனுக்கா பக்தன் ஏங்குகிறான். பக்தனுக்காக இறைவன் ஏங்குகின்றான்.  

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர். “தாமசகுணம், ரஜோகுணம், சத்வகுணம் மூன்றில், சத்வகுணம் சிறந்தது.. சத்வகுணத்திலும் சத்வதாமசகுணம், சத்வரஜோகுணம், சத்வசத்வகுணம் உண்டு,   பரமஹம்சர்கள் இந்த மூன்றுக்குணங்களையும் கடந்தவர்கள்” என்பார்.

காம,குரோத, மோகத்திற்கு அப்பார்ப்பட்ட தூய சியமந்தமணியை கைக்கொள்வர்களின் முக்குணம் அந்த மணியில் ஏறி, .அந்த குணத்தின் இருப்பிடமாக அந்த அணி ஒளிர்கிறது. ஒவ்வொரு குணமும், மேலும் மூன்று குணங்களாக கிளைக்கிறது. ஏழு அரசியரும் அந்த குணங்களுக்குள் சிக்கித்தவிக்க காளந்தி அந்த குணங்களை கடந்து பரமஹம்ச நிலையை அடைந்து இருக்கிறாள். குணம் அற்றவளின் குணத்தை அடையும் மணி’யும் குணமற்றதாக ஆகின்றது. காளந்திப்போன்ற பரமஹம்சர்கள் நதியின் மையத்தில் அமர்ந்துகொண்டுவிடுகிறார்கள். “இயந்திரக்கல்லின் அச்சியின் அருகில் இருக்கும் உளுத்தம்பருப்பு அறைபடுவில்லை” என்று பகவான்ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்வதுபோல, காளந்தி இளையயாதவனிடம் தன்னை ஒளித்துக்கொள்வதுபோல அமர்ந்து கண்ணனில் கலந்து தப்பிவிடுகின்றாள். ஆனால் மற்ற எழுவரும் அவர்கள் அவர்கள் குணத்திற்கு ஏற்ப பீடத்தில் அமர்ந்து தங்கள் குணத்தால் கண்ணனிடம் இருந்து விளகி அறைபடுகின்றார்கள்.

காளந்தியும் கண்ணனும் இங்கு வேறா? பரமஹம்சர்களும் பகவானும் வேறா?  காளந்தி அடையும் மையத்தை அர்ஜுனனும் கண்ணனின் கூட்டால் அடைகின்றான் ஆனால் அவனால் அங்கு நிலைக்கமுடியவில்லை. மின்னலில் தெரிந்த மலை, மின்னல்போனதும் இருட்டென்றே ஆகிவிட்டதுபோல் அர்ஜுனன் ஒரு நொடியில் அந்த மையத்தில் இருந்து நதியின் ஒழுக்கில் விழுந்து நீந்தவேண்டியவனாக உள்ளான்.. ஞானசூரியனாகவும் இறைவனே இருக்கிறான், மாயஇருளாகவும் இறைவனே இருக்கிறான். அர்ஜுனன் வாழ்க்கை நதியில் இன்னும் நீந்தவேண்டும் என்பது அவனது திருவுளம்போலும். ஊஞ்சலில் ஆடுபவன் கால்களால்  பூமியைத்தொடமல் காற்றுபோல் அங்கும் இங்கும் போகின்றான். ஊஞ்சலைவிட்டு இறங்கியவன் ஒரு அடி நகரவேண்டும் என்றாலும் காலைத்தான் பயன்படுத்த வேண்டி உள்ளது. கண்ணன் அருகில் இருக்கும்போது ஊஞ்சலில் இருப்பதுபோல் இருக்கிறது அர்ஜுனனுக்கு, கண்ணன் அகன்றால் பூமியில் நடந்துக்கொண்டு இருக்கிறான். கண்ணனுக்கு நண்பனாக, மனைவியாக, தொழும்பனாக, உறவினாக எல்லாம் இருக்கலாம் அதனால் அவர்கள் பெரும் பயன் பெரிதாக இருக்கலாம் ஆனால் காளந்திப்போல் மகாயோகி ஆவது என்பது ஒருவழிப்பாதையில் சென்றாலும் மையத்தில் அசையாமல் நிற்பதால்  அடையக்கூடியது. அந்த மையம் எல்லாப்பாதையின் கூட்டாக அமைந்துவிடுகின்றது. காளந்தியை இப்போது பார்க்கும்போது அவளிடம், ஞானம் பக்தி, கர்மம் என்று மூன்று நிலைகளும் இருப்பது தெரிகின்றது. அன்று அவள் தொடங்கியது கர்மமார்க்கத்தை.  இதற்கு முயற்சி மட்டும் போதுமா? இறைவன் கருணையும் வேண்டும்.

இந்திரநீலம் என்னும் பெரும் நாவல் காளந்தி என்னும் ஒரு பெரும் மாகயோகியாகிய பந்தை தனது ஆடுகளத்தில் வெற்றி இலக்கில் சேர்க்க எத்தனை எத்தனை பாதையில் தன் ஓட்டத்தை நடத்துகின்றது. நன்றி ஜெ.

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.