Saturday, May 14, 2016

சிக்கல்களின் விரிவு



கசங்கிய பட்டுச் சேலையை நீவி நீவி விரித்தெடுப்பது போல ஜெ மகாபாரதத்தின் விளங்க முடியா சிக்கல்களை நீவி நீவி சிக்கெடுத்துக் கொண்டிருக்கிறார். சூதாட்டத்திற்கு திருதாவிடம் அனுமதி வாங்க விதுரரே செல்கிறார். ஏன் விதுரர், பீஷ்மர் உட்பட ஒவ்வொருவரும் அதற்கு அனுமதியளித்தனர் என்பதற்கு விடை பன்னிருபடைக்களத்தின் விருச்சிக மாத அத்தியாயங்கள். ஜராசந்தனின் வருகையையும், அவன் கொண்ட பேருருவையும் அதற்கான முழு நியாயத்தையும் வெண்முரசு செய்து விட்டது. இதோ குருஷேத்ரம் ஒருங்கி விட்டது. அது தவிர்க்கப்படவே ஒவ்வொருவருமே முயன்று கொண்டிருக்கப் போகிறார்கள். எண்ணற்றோர் குருதி வீழ்வதைத் தடுக்கவே ஒவ்வொரு சிறு சிறு அறப் பிழைகளையும் அனுமதிக்கப்போகிறார்கள். ஆம், மிகப்பெரிய அறத்தில் இருந்தே மாபெரும் தீமை கிளைத்தெழ இயலும் இல்லையா!!!

அருணாச்சலம் மகராஜன்