Thursday, June 2, 2016

முதுமையின் முகங்கள்

எப்போதெல்லாம் கையறு நிலையில், தன் அனைத்து அரசு சூழ்தல் அறிவும் திகைத்து நின்று விதுரர் தவிக்கும் போதெல்லாம் இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போல மிக எளிமையான தீர்வுகளை எடுத்தளிக்கும் சுருதையை மீண்டும் சந்தித்தது இரு நாட்களாக இருந்து வந்த ஒரு உளச் சோர்வில் இருந்து அபாரமாக என்னை மீட்டது. ஒரு வகை ஆசுவாசம். எனக்கே இப்படி என்றால், விதுரருக்கு!!! மிகச் சரியாகத் தான் விதுரர் சொல்கிறார் - "முப்பதாண்டுகாலமாக இந்நகரின் அரசியலில் முதன்மை முடிவுகள் அனைத்தையும் இச்சிறுமாளிகைக்குள் இருந்து எடுத்துக் கொண்டிருக்கிறாய்."

"காமம் அணைந்த பின்னர் அவர்களுக்குள் விழிநோக்கிப் பேசுதலும் உடல்தொடுதலும் மிகவும் குறைந்துவிட்டிருந்தது..........." எனத் துவங்கும் ஒரு பாராவில் ஒரு முழு வாழ்வையுமே சொல்லத் தனி அருள் வேண்டும். இறுதியாக சுருதையின் கையைத் தன் கைக்குள் வைத்துக் கொண்டு அவர் நெகிழும் அந்த காட்சி தந்த பரவசம், ஆஹா!! என்ன இருந்தாலும் தனக்கென ஒரு ஆன்மா இருப்பதன் பேரின்பம் அடைந்தவன் தானே மண்ணில் வாழ்ந்தவனாகிறான். என்ன ஒரு அருமையான தாம்பத்யம்!! என்ன ஒரு எழுத்து வன்மை!! அபாரம் ஜெ. 

வயதானாலும் அவர்களுக்குள் எந்நாளும் இருந்துவரும் அந்த ஒளித்து விளையாடும் விளையாட்டு மட்டும் போகவே இல்லை. எது முதலில் இருந்ததோ அதுவே கடைசி வரை எஞ்சும் போலும்!! 

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்