Saturday, January 21, 2017

ஆனந்த நடனம்



மகாத்மாகாந்திஜி“ அழிவிற்கும் இடையில் வாழ்க்கை இருந்துக்கொண்டு இருக்கும் கட்டாயத்தை  காண்கிறேன். ஆதலால் அழிவிற்கும் அப்பால் உயர்ந்ததான ஒரு நெறி இருந்தாகத்தான் வேண்டும் அந்த நெறியின் கீழ் மட்டுமே ஒரு நல்ல ஒழுங்கான சமூகம் அர்த்தமுள்ளதாகவும் வாழ்வதற்குகந்ததுமான நலமுடன் இருக்கமுடியும்“ என்கிறார். 

பாலைவன  பையில் மூடி மறைக்கப்பட்ட பொம்மைகளை எடுக்க ஜிப்பைபிடித்து அதிவேகமாக இழுக்கும் குழந்தையின் ஆவலோடு  அந்த சாலையில் நூற்றிருபது கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும்போது எதிர்சாலைக்கு அப்பால் முழுதும் காய்ந்த ஒரு பூமரத்தைக்கண்டேன். மனம் முழுவதும் ஒடிந்து உதிர எத்தனிக்கும்போது அதன் நுனியில் ஒருகிளை பசுமையாய் தழைத்து இலையோடு மஞ்சள் வண்ணப்போவோடு மரகதப்பட்டுத்திய மஞ்சள்அழிகிபோல அசைந்து ஆடி புன்னகைத்துக்கொண்டு இருந்தது.

ஓட்டுனரிடம் வண்டியை ஓரம்கட்டி நிறுத்தச்சொல்லி அந்த மரத்தை நின்றுப்பார்த்தபோது மனம் உலகை மறந்து ஒரு கணம் அந்த பூங்கிளையாய் மட்டும் மாறி ஆடி அசைந்து ஆனந்தத்தில் தாண்டவம் செய்தது. எது அந்த மரத்தை முழுவதும்  பட்டுப்போகச்செய்தது? எது அந்த பட்டுப்போன மரத்தின் ஒருகிளையை பூத்துக்குளுங்கவைத்தது? கொடும்பாலையில் சிக்கி வெந்து கருகிசாகும் ஒரு ஜீவன் தன்னைத்தான் உண்டு  உயிர் தழைப்பதுபோல் அந்த மரம் நிற்கும் என்றால் இயற்கையின் முகம்தான் எத்தனை யதார்த்தமானது. இயற்கை மரணத்தையும் ஜீவனையும் ஒரே முகத்தில் தாங்கி தனது மோனத்தில் ஆழ்ந்துகிடக்கிறது. தனது சிவசக்தி நடத்தை தானே நிகழ்த்தி தானே ரசித்து தானே திகைத்து தானே தாண்டியும் சென்றுக்கொண்டு இருக்கிறது. அது அதில் இருக்கிறது, அது அதற்கும் அப்பாலும் இருக்கிறது. அது

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய் – என்று நின்று அது இருமை பெரும்வெளியல் பிரபஞ்சம் முழுவதும் தனது இருமைநிலையால் தன்னைத்தான் தழுவி முட்டி மோதி விளையாடிக்காட்டுகின்றது .அந்த விளையாடலில் கணம் கணம்தோறும் ஆக்கல் காத்தல் அழித்தல் அருளல் மறைத்தல் என்று தனது இறைலீலையை நடத்திச்செல்கிறது அதனிடம் நாம் “குருவாய் வருவாய் அருவாய் குகனே“ என்று இறைஞ்சுகின்றோம். அதுவன்றி நாம் அதனிடம் எப்படி இணைவது. அந்த இணைதல் நம்மை அது அதுவாக செய்கிறது.  அதுக்கும் நமக்கும் இடையில் நமது அகங்காரம் ஒரு கல்திரையாக நின்று நம்மை அதனிடம் ஒட்டாமல் செய்கிறது அதை உணரமால் அறியாமல் புரியாமல் வைக்கிறது. அது அதுவாகவும் நாம் நாமாகவும் இருக்க அது ஆடும் ஆடல்மேடையாக அகங்காரம் நிற்கிறது. அந்த அகங்காரமேடையை நாம் அகற்றினால் அது அங்கு நிற்க முடியாமல்   நம்மில் ஆடி  இரண்டல்ல ஒன்று என்று காட்டுகின்றது. அது சிவம் என்று காட்டி சிவமாகுதல் என்கிறது.

சிவபெருமான் இடம் பாசுபதம் பெறச்செல்லும் அர்ஜுனன் சிவன் மான்மழு ஏந்தி காளைவாகனத்தில் மாதொருபாகனாய் வந்து தோடுடைய செவியனாய் காட்சிக்கொடுத்து ஞானசம்பந்தருக்கு திருமுலைப்பால் கொடுத்ததுபோல் பாசுபதம் கொடுப்பான் என்று எண்ணி இருப்பான்? அர்ஜுனன் மட்டும் இல்லை ஒவ்வொரு மனிதனும் இறைவன் இத்தன்மையவன் இப்படிப்பட்டவன் இந்தவடிவத்தினன் என்று எண்ணியெண்ணித்தான் இறைவன் கடந்துப்போவதை காணாத கண்கொண்டவர்களாக இருக்கிறார்கள். அர்ஜுனன் காண்பது யாரை? பன்றியை கொன்றுத்தின்னும் காட்டாளனை. காட்டாளன் யார்? அர்ஜுனனைவிட குலத்தால் கீழானவன், அர்ஜுனனைவிட கல்வியில் கீழானவன். அர்ஜுனனைவிட புகழால் கீழானவன். அர்ஜுனனைவிட கொடையால் கீழானவன்.  அர்ஜுனனை விட தவத்தால் கீழானவன். அர்ஜுனனைவிட மெய்யறிதலில் கீழானவன். 

கீழானவன் மேலானவன் ஆகும் ஒரு தருணம் இருக்கிறது. ஒரு செயல் இருக்கிறது. ஒரு அரிது இருக்கிறது. அதை அறியும்போது கீழானவன் மேலானவன் ஆகின்றான். கீழானவன் மேலானவன் ஆகின்றபோது அறிந்தவன் கீழானவன் ஆவது இல்லை மாறாக தான் இருந்த கீழ்மையில் இருந்து விடுப்பட்டு மேல் செல்கிறான். மண்ணில் நின்று விண்ணில் பயணிக்கின்றான். இந்த விடுபடுதல் இதுவரை இருந்த உலகத்தில் இருந்து ஒரு உயர்ந்த உலகத்திற்கு விடுப்பட்டவனை தூக்கிச்செல்கிறது அல்லது அன்போடு அருளாகவந்து அழைத்துச்செல்கிறது.

அர்ஜுனன் யாரை கீழானவன் என்று எண்ணினானோ அவனை மேலானவன் என்று அறியும் ஒரு நாடாகம் நடந்து முடிந்து விடுபடும்போது அவன் மண்ணில் இருந்து கைலையை அடைகின்றான்.

அர்ஜுனன் காட்டாளனை அவன் மனையாள் காளியை குழந்தை கொம்பனை குமரனை எளிய குடும்பத்தின் ஆசாபசங்கள் நிறைந்த எளியவாழ்வு வாழும் மானிட வர்க்கமாக பார்க்கிறான். அந்த வாழ்விற்குள் பொதிந்து இருக்கும் ஆனந்தம் அர்த்தம் இருமையில்லா ஒருமை, கணம் கணமாக வாழ்வை கொண்டாடும் நிறைவு தெளிவு அவர்கள் எளியக்குடும்பதினர் இல்லை மாபெரும் பிரபஞ்சத்தை ஒரு குடும்பமாகக்கொண்ட சிவகுடும்பம் என்பதை உணர்கிறான். அங்கு வேற்றுமை இல்லை, உயர்வுதாழ்வு இல்லை, பெரிது சிறிது இல்லை. எல்லோரும் ஓர்நிறை. எல்லோரும் ஒர் உணர்வு நிலை. அங்கு பாயசம் உண்டு முடித்ததும் சிறுகுழந்தையும் நிறைவில் ஏப்பம் விடுகிறது. முதியவளும் உண்ட நிறைவில் ஏப்பம் விடுகிறாள். மொத்த மானிட குழாமும் ஏப்பம் விடுகிறது. அது ஒரு முழுநிறைவு. அங்கு மானிடர் தனித்துகள்கள் அல்ல அனைத்துமானிடரும் கலந்த மானிடவிராடரூபம் அது. உண்ணுதல் ஒரு வேள்வி என அங்கு நிகழ்கின்றது. ஒவ்வொரு செயலும் அங்கு வேள்வியாக முழுமையாக நிறைவாக தெளிவாக மனம் மொழி மெய்யால் விழிப்போடு நடக்கின்றது அதனால் அங்கு ஆனந்தம் நிறைந்து இருக்கிறது. காட்டாளன் ஆனந்த நடனம் செய்து நடராஜனாகும்போது ஊரே ஆனந்த நடராஜராக ஆகின்றது. அங்கு ஆடுபவர் பார்ப்பவர் என்ற பேதம் இல்லை. எல்லோரும் ஆனந்த நடராஜர். அந்த ஆனந்த நடராஜராகும் தருணம் அர்ஜுனனுக்கும் வருகிறது.

//இடக்கால் எடுத்து சுழற்றி வலக்கால் சுட்டுவிரல் நுனியில் நின்று சுழன்றாட பறந்தது புலித்தோல்சிறகெனஎழுந்து சுழன்றது சடைத்திரள்தூக்கிய கால் குத்தென எழுந்து தலைக்குமேல் ஒரு மையத்தில் நிலைக்கசுழன்று சுழன்று வெறும் சுழிப்பென ஆகி  அவன் விழியிலிருந்து மறைந்தான். அர்ஜுனன் அச்சுழலில் தான்கரைவதை உணர்ந்தான்தோஇக்கணம்மறுகணம்இதுஇக்கணம் என உணர்ந்து சென்று பின்புஅனலைச்சுற்றி மாபெரும் சுழியாகச் சுழன்றுகொண்டிருந்தான்விசைகொண்டெழுந்துஅவ்வனலென்றானான்விசும்பின்மேல் வெளிசூடி நின்றான்.//

இந்த நிறைநிலை வருவதுதான் இறையாதல், இறைவன் யாரோ எங்கு எதுவோ இல்லை. அது இங்கு எப்போதும் இருக்கிறது. அது தெரியாமல் எது மறைக்கிறது? அது அகங்காரம் என்று கிராதம் காட்டுகிறது. அகங்காரத்தின்மீதேறி நின்றுப்பார்க்கும்போது இறைவன் ஆனந்தன் கீழானவனாக தெரிகிறான். மானிடன்  அதற்கும் தான் மேலானவன் என்று நினைக்கிறான். தற்கொலைக்கு அழைத்துச்செல்லும் அகங்காரம் ஆற்றலோடு ஞானத்தோடு அருளோடு வரும் அன்னையால் தோண்டி எடுக்கப்பட்டு அந்த இடத்தில் மூன்றாவது கண் பொருத்தப்பட்டால் இறை உணர்தல் இறையாதல் நடக்கிறது.

இறை உணர்தல் இறையாதல் என்பதை காட்ட கிராதத்தில் ஆசிரியர் ஜெயமோகன் பயன்படுத்தும் கற்பனையும் சொல்லும் உத்தியும் வாசகனை முழுவதும் இறை உணர்தல் இறையாதல் நிலைக்கு அழைத்துச்செல்கிறது. வண்ணமாக வடிவமாக வாசமாக  சுவையாக அவர் அதைப்படைத்து இருள் ஒளி இரண்டையும் கலக்கவேண்டிய அளவு கலந்து வைக்கவேண்டிய இடத்தில் வைக்கும்போது வாசகன்  நிஜஉலகில் இறையுணர்வில் ஆனந்தத்தில் மூழ்குகின்றான்.

ராமராஜன் மாணிக்கவேல்.