Sunday, January 8, 2017

வேதங்கள்






அன்புள்ள ஜெ

அர்ஜுனன் தவம்செய்யும்போது வேதங்கள் தேரில் வந்து கூட்டிச்செல்லும் இடம் ஒரு அழகிய கற்பனை. குரோதவடிவமாக அதர்வண வேதம். காமமாக இசைவேதமாகிய சாமம். மோகமாக யஜூர். ஒவ்வொன்றுக்கும் ஒரு நிறம். குரோதமான அதர்வணம் கருப்பு. காமமாகிய சாமம் சிவப்பு. பேராசையான  யஜூர் பொன்னிறம்

மூன்றிலிருந்தும் அவன் தப்புகிறான். க்ரோதத்தை வெல்ல க்ரோதமே இல்லாத டீன் ஏஜ் ஆக மாறுகிறான். காமத்தை வெல்ல குழந்தையாக ஆகிவிடுகிறான். மோகத்தை வெல்ல அம்மா தவிர ஆசையே இல்லாத கைக்குழந்தைஆகிறான். அந்தக்கைக்குழந்தையை  ரிக் என்னும் அன்னை [சாந்தம்] தன் கருப்பைக்குள் திரும்ப எடுத்துக்கொள்கிறாள்

என்ன ஆச்சரியமென்றால் முப்புரமும் அந்தக்கருவறைக்குள்தான் உள்ளன. நான் என நினைக்கும் அணு. அது ஆணவம். வலையாக வருவது கர்மம். அதன்பின் ஆடிப்பாவையாக மாயை. அதை எரித்து அவன் விடுதலை பெறுகிறான்

சைவ உருவகங்கள் வழியாக நுட்பமான பயணம். ரிக்வேதத்தை பிற மூன்று வேதங்களையும் பெற்ற தாய் என்று சொல்லியிருப்பதை எண்ணி மகிழ்ந்தேன்

ஜெயராமன்