Wednesday, February 8, 2017

காலம்



காலம் தன்மீது ஒரு திரையை போட்டுக்கொண்டு நடக்கிறது. திரையால் காலம் இரண்டாக நடனமிடுகிறது. வெளியே ஒரு நடனம் உள்ளே ஒரு நடனம். இருநடனமும் ஒன்றாக இருக்கலாம் வேறுவேறாகவும் இருக்கலாம். வெளியே ஆனந்தமாக இருக்கும்போது உள்ளும் ஆனந்தம். வெளியே துன்பமாக இருக்கும்போது உள்ளும் துன்பம் இது ஒருவகை நடனம். வெளியே ஆனந்தமாக இருக்கும்போது உள்ளே துனம்பம், வெளியே துன்பமாக இருக்கும்போது உள்ளே இன்பம் இது ஒருவகை நடனம்.

திரௌபதி தருமனுக்க பத்தினியாய், பீமனுக்கு களித்தோழியாய், அர்ஜுனனுக்கு காதலியாய் நகுலன் சகதேவனுக்கு அன்னையாய் வாழ்கிறாள் அதே காலத்தில் ஜராசந்தனுக்கு காமுகியாய் தெரிகிறாள். காலத்தின் திரையைத்தாண்டி இங்கிருந்து அங்கே பார்க்கமுடியவில்லை. அங்கிருந்து இங்கே பார்க்கமுடியவில்லை. காலம் இரண்டாகவும் நின்று நடிக்கிறது. காலம் பெண்மையின் இருபெரும் பண்புகளின் உயிர்வில் தன் முழுவிசையை நிருத்தி தன்னைத்தான் கண்டுக்கொள்கிறது. காலத்தின் இந்த இரு வெளியிலும் வெண்முரசு திரைத்தாண்டிப்பார்க்கிறது. 

கோமதி நதிக்கரையில் சாலமரவனத்தில் தாங்கள் உருவாக்கிய பூவனத்தில் பூத்த மலர்கள் போல இனிமையை கருக்கொண்ட கருணை உள்ளங்களாய் வாழ்ந்த பாண்டவர்கள் வாழ்வில்  கள்ளமும் காமமும் நுழைய கெபாடூரத்தின் உச்சியில் கருணையின் மறு எல்லையில் நின்று பூமியை குருதிக்காடாய் ஆக்கிக்காட்டுகின்றார்கள்.

குரங்குகள்போல விளையாடுவதையே வாழ்க்கையாக கொண்ட பீமன் கணத்தில் கொடூரத்தின் மொத்த உருவமாக மாறுவதுதான்  மானிட அகத்தின் இருவேறு ஆழமும் உயரமும். ஆழத்திற்கும் உயரத்திற்கும் இடையில் காலம் ஒரு திரையைப்போட்டுநடிக்கிறது. அந்த திரை இல்லாதபோது காலம் பொருள் இழந்துப்போகும். காலம் பொருளாக இந்த திரையோடு வந்து நடிக்கிறது.  மதுவருந்தி களி மயக்கில் இளித்தவன் அந்த மணம்மாறும்முன்பே பலரை தலை சிதறடித்து இளிக்கிறான்.

காலையில் எழுந்து மலர்த்தோட்டத்தைக்கண்டு விந்தைக்கொள்ளும் அர்ஜுனன் அதன்  முடிவாக மனிதநிணத்தில் நின்று தவிக்கிறான்.  “நாம் சமைக்கும் அழகு நமக்குத்தேவைப்படுகின்றது“ என்று கூறும் அர்ஜுனன் பீமன் நடத்தும்  குருதிநடனம் கண்டு தவிக்கிறான். கொடும்கூட மனிதன் நடத்துது எதிர்அழகுதானோ? 

காலம் வாழ்க்கை காவியத்தை பூக்காட்டால் மட்டும் எழுதவில்லை. வாழ்க்கை பூக்காடாக மட்டும் இருக்கவேண்டும் என்று நினைக்கும் மனிதனை எவ்வளவு தூரத்தில் உயரத்தில் இருந்து பார்க்கிறது என்பதை மாமலர்த்தொடும்போது அதன் காவியத்தனை சிலிர்க்கவைக்கிறது.    

ராமராஜன் மாணிக்கவேல்