Sunday, April 2, 2017

ஆணெனக் கொள்ளும் அகங்காரம் (மாமலர் 30, 38, 44)

 
       பதவி, செல்வம், வீரம், பலம், அழகு, அறிவு, திறன்  என  ஏதாவது ஒரு  சிறப்பு  ஒருவனுக்கு  மற்றவர்களைவிட அதிகம் கிடைக்கும்போது  அது இல்லாத மனிதர்களைவிட அவனுக்கு  கூடுதல்  ஆற்றல் தருகிறது. அதே நேரத்தில் அத்துடன் அவனுக்கு கூடுதல் பொறுப்புகளும் சேர்கின்றன.  ஒரு சிறப்பு ஆற்றல்  நம்மை பறக்க வைக்கும் இறக்கைகளைக் கொடுப்பதுடன் நாம் சுமந்து செல்வதற்கு பொறுப்புகளையும் தருகிறது. பொறுப்பற்று தன் ஆற்றலை பயன்படுத்துதல் ஒரு சமூக குற்றமென ஆகிறது.
     ஆணும் பெண்ணும் கூடி குழந்தைகளைப் பெறுதல் என்பது இயற்கை நியதி. ஆனால் இதில் ஒரு ஆணுக்கு இருக்கும் ஒரு திறன் பெண்ணுக்கு இருப்பதில்லை. ஒரு உறவை மறுப்பதற்கு இருக்கும் ஆற்றல் ஆணுக்கிருப்பதைப்போல பெண்ணுக்கு  இயற்கை அளித்திருக்கவில்லை. ஒரு பெண்ணால் ஒரு ஆணை அவன் அனுமதியின்றி உறவுகொள்ள முடியாது. ஆனால் இதை ஒரு ஆண் செய்துவிடமுடியும். ஒரு ஆண் ஒரு பெண்ணின் விருப்பின்றி,  அவள் அனுமதியின்றி,  வல்லுறவு கொள்ளுதல்  சாத்தியமானதாக  ஏனோ இயற்கை அமைத்திருக்கிறது. இதில் பெண்ணுக்கு இல்லாத ஒரு திறன் ஆணுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஆண் பெற்றிருக்கும் இந்தத் திறன் காரணமாக  ஆண் பெண் உறவில் ஆணுக்கு பொறுப்பு கூடுகிறது.  பெண்ணே உறவுக்கு நாடி வலிய வந்திருந்தாலும்  அந்த உறவுக்கு பொறுப்பேற்றுக்கொள்வதும், அவ்வுறவு    சமூக நெறிக்கு உட்பட்டதாக  ஆகாதபோது அதற்கான விளைவுகளுக்கான பலனை பெருமளவுக்கு ஏற்றுக்கொள்ளும்  பொறுப்பை சமூகம்  ஆண்களிடம் கொடுக்கிறது. இது ஆண் பெண் உறவு பற்றி பல சமூக நெறிகள் தோன்றுவதற்கான  அடிப்படையாக அமைகின்றது.  ஆண்பெண் உறவில் எந்தளவுக்கு பெண்ணுக்கு சாதகமாக நெறிகள் இருக்கின்றனவோ அந்தளவுக்கு சமூக நெறி உயர்ந்திருப்பதாக நாம் கொள்ளலாம்.  
   ஒரு காலத்தில் கற்பு போன்ற ஒழுக்க நெறிகள்  பெண்ணுக்கு ஒரு பாதுகாக்கும்  வேலியாகப் போடப்பட்டதாக இருந்து, பின்னர் அவளுக்கு சிறையென ஆகிவிட்டிருக்கலாம்.  இப்போதும்கூட சில சமுக அறிஞர்கள்,  ஆண்பெண் உறவுக்கான  ஒழுக்க  விதிகள், பெண்ணுக்கு சமூகத்தில் அதிக பாதுகாப்பை அளிப்பதாக  சொல்கிறார்கள். அது எந்த அளவுக்கு சரியென்று தெரியவில்லை. எப்படியாயினும் ஆணுக்கு இப்படி அதிகப்படியாக கிடைத்திருக்கும் திறனை அவன் பொறுப்பாக பயன்படுத்திக்கொள்ள அனைத்து சமூகங்களும் எதிர்பார்க்கின்றன. ஒரு பெண்ணை வல்லுறவுகொள்ளும் குற்றத்தை கொலைக்குற்றத்துக்கு அடுத்த நிலையில் அனைத்து சமூகங்களும் வைத்திருப்பதைக் காணலாம். மேலும் தன்னைச் சார்ந்த பெண்களுக்கு இதற்கான பாதுகாப்பை வழங்கத் தவற நேரிட்டால் அதை தமக்கு ஏற்பட்ட  பெரும் இழிவென ஆண்கள் கருதுகிறார்கள்.    அதனால்  அந்நிகழ்வுகளை  தன் உயிரைக்கொடுத்தும் தடுக்க   ஆண்கள் முயல்கிறார்கள். 
     பெண்ணின் அனுமதியைப்  பெறாமல் வல்லுறவில் ஈடுபட முயல்வதை மூன்று நிகழ்வுகளில் சமீபத்தில் வெண்முரசில் காண்கிறோம். ஹூண்டன் அசோகசுந்தரியை வல்லுறவு கொள்ள முயல்கிறான். உண்மையில் அவன் அவளைத் திருமணம் செய்துகொண்டு அவளுக்கு அரசியென ஆக்கிக்கொண்டபின்தான் இதில் முயல்கிறான்.  அப்போதைய குடும்ப நெறிகளின்படி இப்படி அவளை வற்புறுத்துவதை சரியென்று அவன் நினக்கிறான்.  ஆனால் அவள் அவனை தன் கணவன் என ஏற்றுக்கொள்ளவில்லை. அவன் கையில் அவள் அளித்த மலர் மலரவில்லை. அதனால் அவனைக் கணவன் என்று அவள் மனமும் மலர்ந்து ஏற்றுக்கொள்ளவில்லை. அவன் அவளை மணப்பது புறத்தில் மட்டுமே நடக்கிறது. அவள் அகத்தில் நடப்பதில்லை. அவனை அவள் நேசிக்கவில்லை. காதலுறவில்லை, காமம்கொள்ளவில்லை. இப்படி இருக்கையில் ஒரு ஆணென அவன் பொறுப்பு அவளை வற்புறுத்தாது விடுவதே. ஆனால் அந்தப் பொறுப்பைத் தவிர்த்து வல்லுறவு கொள்ள நினைக்கிறான்.   அவன் பெரும் மன்னன் என்றாலும், பெரும் வல்லமை கொண்டவன் என்றாலும், அவளை அரசியென ஆக்கியவன் என்றாலும், அவளின் விருப்பத்திற்கு மாறாக உறவுகொள்ளும்  உரிமையை அவன்  இம்மியளவும் பெறுவதில்லை. அவன்  சபிக்கப்பட்டு, இடைக்குக்கீழ் கல்லென ஆவதற்கு இக்குற்றம் காரணமாகி நிற்கிறது.
   அடுத்ததாக நிகழ்வது,  நகுஷன் அசோக சுந்தரியை உறவுகொள்ளுதல்.  அசோகசுந்தரி  மனம் விரும்பி தனக்கென  ஏற்ற துணைவன் நகுஷன். அவளுக்கு அதில் எவ்வித மறூப்பும் இல்லை. மேலும் அவள் இத்தனை நாட்கள் காத்திருந்து அடைந்த கணவன் அவன்.   ஆனால் அவள் உள்ளம் உறவுகொள்வதற்கான முதிர்வை அடையவில்லை. அவள் சின்னஞ்சிறு சிறுமியென உளம்கொண்டு இருப்பவள்.  உடல் கனிந்துவிட்டிருக்கிறது எனவே  அதை ஆட்கொண்டு உளம் கனியவைத்துவிடலாம என நினைக்கிறான் நகுஷன். ஆணுக்கு காமம் உடலில் தோன்றி உள்ளத்தை அடைகிறது. ஆனால் பெண்ணூக்கு உள்ளத்தில் தோன்றிய பின்னரே உடலில் மலர்கிறது.  அவள் மனமலர் நாடி, பனிநீர்த்துளிகளென அருகணைந்து,   காலை மென்கதிரொளியென பொலிவளித்து,    தேன் வண்டென ரீங்கரித்து, தென்றெலென தீண்டி,   மலரவைக்கும் அருங்கலையை  அறியாத மூடனாக  நகுஷன் இருக்கிறான்.  என்ன செய்யலாம்  என எண்ணி எண்ணி சித்தம் குழம்பி,   மலரவைக்கிறேன் என நினைத்து குவிந்திருந்த  இதழ்களை மலரிலிருந்து பிய்த்தெறிந்து விடுகிறான். அவன் செய்த தவறு  வெறும் மூடத்தனத்தால் விளைந்ததென்பதால் அவன் தன்னைத்தானே நொந்துகொள்ளுதலே தண்டனையென ஆகிவிடுகின்றது.
    அடுத்து நகுஷன் இந்திராணியை அணுகுதல்.  இந்திராணி தேவருலகின் நியதிப்படிநகுஷனின் மனைவியானவள். ஆகவே ஏற்கெனவே அவளை  மணம் புரிந்துகொண்டவனாக அவன் கருதப்படுவான். அப்படியிருந்தும் இந்திராணியின் மனதில் காதலனாக வேறு ஒருவன் இருக்கிறான். ஆம் இந்திரன் அவளுக்கு முந்நாள் கணவன்தான். முந்நாள் கணவனை நினைத்துக்கொண்டு இந்நாள் கணவனை அவள் தவிர்க்கிறாள். அவளை நெருங்கக்கூட நகுஷனால் இயலவில்லை.  இன்னொருவர் மேல் காதல்கொண்டு இணங்காத பெண்ணைஅவள் மனைவியாக இருந்தாலும்  வற்புறுத்த ஒரு ஆணுக்கு உரிமையில்லை.  தன் ஆணவத்தை தன் காலடியில் கழற்றி வைத்து அர்ப்பணிப்பவன்மேல் தான் ஒரு பெண் நேசம் கொள்கிறாள். ஆனால் அவனோ பெரும் முனிவர்கள் தன்னைச் சுமந்துசெல்ல அவன் பெரும்ஆணவத்தை தன் தலையில் சுமந்துகொண்டு அவளை அடைய செல்கிறான். அவனின் அந்த ஆணவச்செயலால் எப்பலனும் இன்றி மேலுலகிலிருந்து கீழே வீழ்த்தப்படுகிறான்.
  முதல் நிகழ்வு  தன்னை விரும்பாத பெண்ணுடன் உறவு கொள்ள முயலுதல். இரண்டாவது நிகழ்வு உறவில் விருப்பமில்லாத பெண்ணை வலிந்துகொள்ளும்  உறவு, மூன்றாவது மற்றொரு ஆணை நேசிப்பவளை உறவுகொள்ள முயலுதல்.  ஆண் என்ற அகங்காரம் கொண்டு இத்தகைய செயல்களைச் செய்பவர்கள்  சான்றோரால் சபிக்கப்படுவார்கள், தம் நிலையிலிருந்து கீழே வீழ்த்தப்படுவார்கள்,  சமூக விலக்கத்திற்கு ஆளாவார்கள் என நமக்கு உரைத்துச் செல்கிறது வெண்முரசு. 

தண்டபாணி துரைவேல்