Monday, May 29, 2017

கோலம்

அன்புநிறை ஜெ,



நீர்க்கோலம் மிக நேர்த்தியாகத் தொடங்கியிருக்கிறது

கடந்த ஆண்டு எனது தாத்தாவின் நூற்றாண்டை முன்னிட்டு அவர் உலகப் போர் காலகட்டத்தில் வாழ்ந்த மலேய நகரங்கள் பினாங் மற்றும் கோலாலம்பூரைக் காணச் சென்றிருந்தேன். காரில் சென்றால் சில மணி நேரங்களே சிங்கையிலிருந்து. எனில் தாத்தா சென்றது போல கடல்வழி செல்லும் கனவிருந்தது எனக்கு. பின்னர் 
கடலூர்தி (cruise) ஒன்றில் சென்றோம்.

மூன்று தினங்களும் ஆழிமேற்பயணம். ஒவ்வொரு நிமிடமும் ஒன்றே போலிருப்பினும் வெவ்வாறாகவும் நிகழும் கடல்.கடல் பார்க்கும் ஒவ்வொரு முறையும் சலில்பே ஏற்படுத்துவதில்லை யானையைப் போல - ததும்பி நிற்கும் மாநிலைகள் - மனதின் வெளித்தோற்றம்.

உள்ளுறை நிலமும் காற்றும் ஒளியும் நீருடன் ஆடும் நடனம் ஒப்பீடற்றது. பொன்னுருகும் அதிகாலையும் இளநீல முற்பகலும் மேகநிறம் கொள்ளும் பகற்பொழுதும் பற்றி எரியும் அந்திச் செந்தீயும் வண்ணக்கோலங்கள். இரவிலோ கனத்துக் கரைகிறது வெளியோடு


வானும் காற்றும் ஒளியும் சிறுகுழந்தையென கடலில் தங்களைத் தீட்டி தீட்டி எழுதிக் கொண்டே இருக்கின்றன.  எனில் அத்தனை வண்ணங்களும் அலைகளும் வெளித்தோற்றம்தான். உள்ளுறையும் கரிய பேரமைதி எதையும் விழுங்கி தனதாக்கும் தன்மையது. பேரமைதியைவிட 
சலனம் மனிதனுக்குப் பரிச்சயமானது. எனவே 
மனிதன் நீர்க்கோலம் கண்டே கடலோடத் துணிந்திருக்கலாம்.
அப்போது தோன்றியது -
அஞ்சாதே அலைகளை
ஆழத்தில் கிடக்கிறது
மௌனம்  

நீர்க்கோல வாழ்வு கம்பனைத் தொட்டுத் தொடங்கியதிலிருந்தே கனவுகள் எதிர்பார்ப்புகள்.
நீரென நாம் காண்பது சூழ்வதைத் தானே. நீர் பிறரைத் தானெனக் காட்டித் தன்னை மறைக்கிறது. நாமென நம்மை வரைவதும் பிறர் தூரிகைகளால்தானே. கரந்து வாழ நீரென மாற்றம் கொள்ளப்போகிறார்கள். தாங்கள் கொள்ளும் கலத்தின் வடிவில் தங்களைக் காண்பவருக்குத் தக்க வடித்துக் கொள்ளப் போகிறார்கள்
நீர் மேற் கோலம்.
நீர் கொள்ளும் கோலம்.

பிறிதோன் - தமனரின் குருகுலம் நமது ஊட்டி குருகுலத்தையும் நித்யாவுடன் தாங்கள் அனுபவித்த மகத்தான சூரிய தரிசனங்களையும் கண்ணில் கொண்டு வந்தது.

வேதமுடிபுக் கொள்கையிலிருந்துதானே கீதை உரைப்பவன் வரமுடியும் - இன்றும் அதே நிகழ்கிறது

கொடுத்து வைத்திருக்கிறோம்.

மிக்க அன்புடன்,
சுபா