Saturday, November 18, 2017

மதம்



ஜெ,

தொடர்ந்து துரியோதனன் தன் பெருந்தன்மையால் ஜெயித்துக்கொண்டே வருகிறான். கர்ணனை அவன் தன் பெருந்தன்மையால் வென்றது மகாபாரதக் கதை. பூரிசிரவஸையும் சல்ய்ரையும் அப்படித்தான் ஜெயிக்கிறான் என்று வெண்முரசு காட்டுகிறது. இப்போது பலராமரையும். அவனுடைய கதாபாத்திரம் இந்த அறநிலை கொண்டதாக உள்ளது. ஆனால் அவனுக்க்ள் இருக்கும் மண்ணாசை அவனை பிடிவாதக்காரனாகவும் எல்லா தீமைகளையும் உருவாக்குபவனாகவும் ஆக்குகிறது

அதேபோல தருமன் அறச்செல்வன். ஆனால் அவனுக்குள் ஒரு தந்திரபுத்தி உறைகிறான். அவனுக்கும் மண்ணாசை உண்டு அதை அடக்கி வைக்கிறான். அடக்கி வைத்தது வெவ்வேறு வடிவங்களில் வெளிவந்துகொண்டே இருக்கிறது. அவனுடைய அலங்காரம் செய்துகொள்ளும் ஆசையே கூட இதன் குறியீடுதான்

அதைத்தான் யௌதேயன் சொல்கிறான். யானையின் மொத்த உடலின் ஆற்றலும் அதன் மதமூறும் சிறு துளைக்குச் சமம். அந்தத்துளை இத்தனை ஆற்றலையும் இல்லாமலாக்கி அதை வேறு ஒன்றாக ஆக்கிவிடக்கூடும். ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது அப்படி ஒரு மதமூறும் வழி


சீனிவாசன்